Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM

திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி; ஆற்காட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ஆற்காட்டில் பாமக வேட்பாளர் இளவழகனுக்கு ஆதரவாக நேற்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ்.

ஆற்காடு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி என ஆற்காட்டில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார், ஆற்காடு பாமக வேட்பாளர் கே.எல்.இளவழகன் ஆகியோருக்கு ஆதரவாக பாமக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆற்காடு பேருந்து நிலையத்தில் பாமக வேட்பாளர் இளவழகனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘‘இந்த தேர்தலில் இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நமது கூட்டணியில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் ஒரு விவசாயி. எதிர் அணியில் போட்டியிடுவது ஒரு அரசியல் வியாபாரி. இந்த தேர்தலில் ஒரு விவசாயிக்கும் வியாபாரிக்கும் நடைபெறும் தேர்தல். இந்த தேர்தலில் நம்மை போன்ற ஒரு விவசாயி வெற்றிபெற வேண்டும்.

நமக்கு இது முக்கியமான தேர்தல். எல்லாரும் ஒரே அணியில் நின்று வெற்றிபெற வேண்டும். நம் கூட்டணியில் அன்பு, பாசம், நேசம் இருக்கும். இப்ப இருப்பது பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி. எவ்வளவோ திட்டங்கள் கொடுக்கின்ற ஆட்சி. திமுக பக்கம் யாரும் வரக்கூடாது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய்யைத் தான் பேசுவார். ஸ்டாலின் எதிர்க் கட்சி தலைவராக இருக்கிறார். அவர் எதிர்க்கட்சி தலைவராக சரியான முறையில் செயல்பட தெரியாத ஸ்டாலின் எப்படி முதலமைச்சராக வர முடியும்.

தினசரி வெளிநடப்பு, சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வருவார். இந்த நாடகமெல்லாம் போதும். ஸ்டாலினிடம் ஆக்கபூர்வமான சிந்தனை இல்லை.

ராமதாஸ் வைக்கும் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுகிறார். நம்முடைய நாற்பதாண்டு கோரிக்கையை நிறைவேற்றி 10.5 விழுக்காடு பெற்றுத் தந்திருக்கிறார். அதை கொடுத்தவர் பழனிசாமி. இது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். வன்னியர்களை போன்று பின்தங்கிய சமுதாயங்களுக்கும் நாம் இட ஒதுக்கீடு தனித்தனியாக பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறது. அதை நாம் பெற்றுத் தருவோம்.

இந்த மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் ராமதாஸ். அதை நிறைவேற்றியவர் முதலமைச்சர் பழனிசாமி. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பை முதல்வர் நிறைவேற்றி உள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விவசாயி முதலமைச்சராக வந்துள்ளார். நம்மில் ஒருவர் முதல்வராக வந்துள்ளார். திமுகவில் வியாபாரிகள், முதலாளிகள் உள்ளனர்.

அந்த கட்சியே ஒரு கம்பனி. இந்தத் தேர்தல் மக்களாட்சிக் கும் மன்னராட்சிக்கும் நடை பெறும் போராக பார்க்கிறேன். மக்களாட்சியில் யார் வேண்டு மானாலும் முதலமைச்சராக வரலாம். திமுகவில் ஒவ் வொரு மாவட்டத்திலும் குறு நில மன்னர்கள் இருக்கிறார்கள்.

ஸ்டாலின் பிஹாரில் இருந்து வந்துள்ள பிரசாந்த் கிஷோரை நம்பியுள்ளார். அவரது கட்சி தலைவர்களையும் தொண்டர்களையும் நம்பவில்லை. ஆனால், நாங்கள் உங்களை நம்புகிறோம். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. திமுக கரூர் வேட்பாளர் இப்போதே மணல் கொள்ளையை ஆரம்பிக்கலாம் என கூறுகிறார். ஸ்டாலினுக்கு சமூக நீதி, இட ஒதுக்கீடு, சமத்துவம், வரலாறு, சரித்திரம் எதுவும் தெரியாது. ஆனால் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என ஸ்டாலின் கனவு காண்கிறார். ஸ்டாலின் அவர்களே உங்கள் கனவு கனவாகத்தான் இருக்கும்.

பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் ஒரு ஆண்டுக்கு 18 ஆயிரம் வழங்க உள்ளார். 6 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளது. மகளிர் குழவினரின் கடனை தள்ளுபடி செய்துவிட்டார். மாணவர்கள் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய உள்ளார். நெசவாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு உண்மையில் பாதுகாப்பு யார் என்றால் அதிமுக, பாமக கூட்டணி தான். உண்மையில் திமுக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் குறித்து எதுவும் வெளியிடவில்லை. ஆனால், எங்கே சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டாலும் ராமதாஸ் ஓடிச் சென்று குரல் கொடுப்பார். இந்த கூட்டணிக்கு பிரதமர் மோடி ஆசிர்வதித்துள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x