தமிழகத்தில் அரசியல் கட்சிக் கூட்டங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசியல் கட்சிக் கூட்டங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் அரசியல் கட்சிக் கூட்டங்களில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிகத்தில் சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், கோவை மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது.

தஞ்சாவூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 55 பேருக்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் 800 பேருக்கு கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா வழிகாட்டுதல்கள் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இருப்பினும் சமீபகாலமாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது இல்லை.

பொதுக்கூட்டங்களில் கரோனா வழிகாட்டு முறைகளைப் பின்பற்றாமல் மக்கள் அதிகளவில் கூடிகின்றனர்.

இதனால், தமிழகத்தில் அரசியல் கூட்டங்கள், வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், விமானம், ரயில், பேருந்துகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.

விசாரணையின் போது நீதிபதிகள், அனைத்து அரசியல் கட்சிக் கூட்டங்களிலும் பாகுபாடு இல்லாமல் முறையாகக் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றனர்.

பின்னர், மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in