9,10,11ஆம் வகுப்பு மாணவர்களின் ஆல் பாஸ் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு - புதிய உத்தரவு  

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களின் ஆல் பாஸ் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு - புதிய உத்தரவு  
Updated on
1 min read

தமிழகத்தில் 9, 10, 11ஆம் வகுப்புகளின் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, 9, 10, 11ஆம் வகுப்புகளின் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகளின் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் ஆர்.கே.நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், “பொதுத் தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் 11ஆம் வகுப்பில் சேரும்போது மாணவர் விரும்பும் பாடத்திட்டத்துக்குச் சேர்க்கை வழங்க முடியும். தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக எந்தக் கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை. தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகே முடிவுகள் எடுப்பர் எனவும், எந்தக் கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவித்து, அரசாணையை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

அதேசமயம், 10ஆம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள், விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்யும் வகையில், அவர்களின் தகுதியைக் கண்டறிய பள்ளிகள், தேர்வு நடத்திக் கொள்ளலாம் எனவும், இது சம்பந்தமாகப் பள்ளிக் கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிகளை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in