

நாகை மாவட்டம் கீழையூர் அருகேஇலங்கைக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்புடைய 120 கிலோ கஞ்சாவை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் இருந்து இலங்கைக்குசட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் நடைபெற உள்ளதாக, நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கீழையூர் கடற்கரை காவல் நிலைய சரகம் நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புக் குழும இன்ஸ்பெக்டர் பி.ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், நுண்ணறிவு பிரிவுதலைமைக் காவலர் வெங்கடேஷ் மற்றும் போலீஸார் வேட்டைக்காரனிருப்பு அருகில் உள்ள கண்டியன்காடு கிராமத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, சின்னசாமி மகன் கலைச்செல்வன் என்பவரின் தோட்டத்தில் 60 மூட்டைகளில் 120 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அவைஇலங்கைக்கு கடத்தப்படவிருந்ததும் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.
இதையடுத்து, கஞ்சா மூட்டைகளை போலீஸார் கைப்பற்றி நாகை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, இந்த கஞ்சா பதுக்கலில் தொடர்புடைய கலைச்செல்வன், சந்திரசேகரன், கணேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.