

உதயநிதி ஸ்டாலினின் வாக்குறுதியை ஏற்று திருப்பத்தூர் நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் திமுக வேட்பாளருக்காக இன்று முதல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கியதால் திமுக நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரனுக்கும், தற்போதைய எம்எல்ஏவான நல்லதம்பிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த முறை வாய்ப்பை இழந்த நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரனுக்கு இந்த முறை நிச்சயம் 'சீட்' கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
அதே நேரத்தில், சிட்டிங் எம்எல்ஏ மீது திமுக நிர்வாகிகளும் சிலர் அதிருப்தியில் இருந்தனர். காரணம் எம்எல்ஏ நல்லதம்பி தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதனால், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரனுக்குதான் நிச்சயம் 'சீட்' கிடைக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் அவரை வேட்பாளராக நினைத்து தேர்தலுக்கு முன்பே வெற்றிக்கான வியூகங்களை வழிவகுத்து, மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து நகரச் செயலாளருக்குத் தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
ஆனால், யாரும் சற்றும் எதிர்பார்க்காத முடிவை கட்சித் தலைமை எடுத்தது. திருப்பத்தூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ நல்லதம்பிக்கே இந்த முறையும் 'சீட்' வழங்கப்பட்டது. கனிமொழி தயவால் எம்எல்ஏ நல்லதம்பி இந்த முறையும் 'சீட்’' வாங்கிவிட்டதாக கட்சி நிர்வாகிகள் பரவலாகப் பேசத்தொடங்கினர்.
இதனால், நல்லதம்பிக்கு இந்தத் தேர்தலில் வேலைசெய்ய மாட்டோம், அவர் தோல்வியடைவது உறுதி எனக்கூறிய திமுக நிர்வாகிகள் சிலர் அவரது அலுவலகத்துக்குச் சென்று தகராறில் ஈடுபட்டு அங்குள்ளவர்களையும் தாக்கினர். இதனால், அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் டி.கே.ராஜா வெற்றி பெறுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
திமுக நிர்வாகிகள் இரண்டாகப் பிரிந்து இருப்பதால் திருப்பத்தூர் தொகுதியின் வெற்றி கேள்விக்குறியாக மாறியுள்ளதாக கட்சித் தலைமைக்குத் தகவல் சென்றது. மேலும், எம்எல்ஏ கனவு தகர்ந்து போனதால் நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கட்சி அலுவலகப் பக்கமே தலைகாட்டாமல் தேர்தல் பணிகளைப் புறக்கணித்து வந்தார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிவு (மார்ச் 17) திருப்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, "கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களது வெற்றிக்குக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் வேலை செய்ய வேண்டும். இந்த முறை சீட் கிடைக்கவில்லை என்றால் அடுத்த முறையும் கிடைக்காதா என்ன? அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வரும், அதில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கிறேன். மேலும், மாவட்டச் செயலாளர் அல்லது திமுக ஆட்சிக்கு வந்ததும் வாரியத் தலைவர் என ஏதாவது ஒன்றைக் கட்சித் தலைமையிடம் பேசித் தருவேன்.
இதுவெல்லாம் நிறைவேற வேண்டுமென்றால் எம்எல்ஏ நல்லதம்பி மீண்டும் வெற்றி பெற வேண்டும். 234 தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார் என நினைத்து அனைவரும் வேலை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதே நமது ஒரே இலக்கு. நாம் இரண்டு பட்டு நின்றால் எதிர்த்துப் போட்டியிடுவோருக்கு பெரிய வாய்ப்பாக மாறிவிடும். எனவே பகையை மறந்து திமுக வேட்பாளர் வெற்றிக்கு அனைவரும் பணியாற்ற வேண்டும்" எனக்கூறி எஸ்.ராஜேந்திரனை சமாதானம் செய்தார்.
உதயநிதி ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை ஏற்று நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் இன்று (மார்ச் 18) காலை தனது அலுவலகத்துக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் என அனைவரையும் அழைத்தார். இதையடுத்து, திமுக வேட்பாளர் நல்லதம்பியும் அங்கு வரவழைக்கப்பட்டார்.
பிறகு 2 பேரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி 2 பேரும் சால்வை அணிவித்து சமாதானக் கொடியைக் காட்டினர். இதைக் கண்ட கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்தனர். பிறகு, "நல்லதம்பி வெற்றிக்கு அனைவரும் வேலை செய்ய வேண்டும். தேர்தலுக்கு 2 வாரங்களே இருப்பதால் காலை முதல் இரவு வரை தேர்தல் பணியாற்ற வேண்டும். வெற்றி ஒன்றே நமது இலக்கு" என, நகரச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
அதன்பிறகு அங்கு வந்த அனைவருக்கும் எம்எல்ஏ நல்லதம்பி சால்வை அணிவித்து தனக்கு ஆதரவு தரும்படி இரு கைகளையும் கூப்பி வேண்டுகோள் விடுத்துவிட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, திமுக வேட்பாளருடன் நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் இன்று மதியம் 3 மணியளவில் தொகுதி முழுவதும் வாக்குச் சேகரிக்க வீதிவீதியாகத் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். இதனால், திருப்பத்தூர் தொகுதி திமுக நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.