Published : 13 Mar 2021 11:44 AM
Last Updated : 13 Mar 2021 11:44 AM

பாலியல் அத்துமீறல்; பெண் எஸ்.பி. புகாருக்கு ஆளான டிஜிபியிடம் சிபிசிஐடி விசாரண

சென்னை

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எஸ்.பி. ஒருவர் காவல்துறை தலைவர் திரிபாதி, தலைமைச் செயலர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் வெளியே கசிந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்து குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் திமுக பெரும் போராட்டம் நடத்தும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புகார் அளிக்க வந்தபோது செங்கல்பட்டு எஸ்.பி. தலைமையிலான போலீஸார் பெண் எஸ்.பி.யைத் தடுத்து நிறுத்தி மிரட்டியதாகப் புகார் வெளியானது. இதையடுத்து, சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டு பெண் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெண் எஸ்.பி. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது உயர் நீதிமன்றம்.

நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதி, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியைத் தடுத்தார் என செங்கல்பட்டு எஸ்.பி.யை மட்டும் சஸ்பெண்ட் செய்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச்-16ல் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணையை உயர் நீதிமன்றம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என எச்சரித்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பிய நிலையில் சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முத்தரசி, விசாரணைக்கு ஆஜராகுமாறு டிஜிபிக்கு சம்மன் அனுப்பிய நிலையில் இன்று காலை டிஜிபி அலுவலகம் வந்தார். அவரிடம் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x