பஹ்ரைனில் ஜேஇஇ தேர்வு மையம்: வைகோ கோரிக்கை ஏற்பு

பஹ்ரைனில் ஜேஇஇ தேர்வு மையம்: வைகோ கோரிக்கை ஏற்பு
Updated on
1 min read

பஹ்ரைன் நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஜேஇஇ பொறியியல் நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு வசதியாக ஜேஇஇ தேர்வு மையம் அமைக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று ஜேஇ இ மையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மதிமுக தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஜேஇஇ பொறியியல் நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு, இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால் தேர்வு மையங்கள் பட்டியலில் பஹ்ரைன் நாட்டில் ஒரு மையமும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பஹ்ரைன் மறுமலர்ச்சி தமிழர் பேரவைத் தோழர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இது தொடர்பாக, மத்திய அரசின் கல்வி அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு மின்அஞ்சல் வழியாக கடிதம் எழுதி கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பஹ்ரைன் நாட்டின் இந்தியத் தூதரக வளாகத்தில் தேர்வு மையம் அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்”.

இவ்வாறு மதிமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in