

சிவகங்கை வந்த அதிமுக வேட்பாளர்களை அமைச்சர் ஆதரவாளர்கள் வரவேற்கச் செல்லவில்லை.
மேலும் முக்கிய பிரமுகர்களின் சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து அமைச்சர் போர்க்கொடி காட்டி வருவதால் அதிமுக வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் தனக்கு தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓராண்டுக்கு முன்பே அமைச்சர் ஜி.பாஸ்கரன் தேர்தல் பணிகளை தொடங்கினார்.
ஆனால் அவருக்கு திடீரென சீட் மறுக்கப்பட்டு, தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் ஆதரவாளர்கள், வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி நேற்று சிவகங்கையில் மறியலில் ஈடுபட்டதோடு தீக்குளிக்கவும் முயன்றனர். அமைச்சர் தரப்பை அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சிவகங்கை வந்த அதிமுக வேட்பாளர்கள் பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), எம்.மருதுஅழகுராஜ் (திருப்பத்தூர்), எஸ்.நாகராஜன் (மானாமதுரை) ஆகியோரை அமைச்சர் ஆதரவாளர்கள் வரவேற்க வரவில்லை.
மேலும் சிவகங்கை வடக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும் அமைச்சர் மகன் கருணாகரனும் வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தார். அமைச்சர் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருவதால் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.