

இந்தியாவில் மருத்துவம் மிகப் பெரிய வியாபாரமாக மாறியுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பூங்குன்றன் (வேலூர்), திருக் குமரன் (காட்பாடி), சுமித்ரா (அணைக்கட்டு) ஆகியோருக்கு ஆதரவாக வேலூர் மண்டித் தெருவில் சீமான் நேற்று வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப் போது, அவர் பேசும்போது, ‘‘இந்தியாவில் மருத்துவம் மிகப் பெரிய வியாபாரமாக மாறி உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய சந்தை பொருளாக மாறி உள்ளது. எவை எல்லாம் அடிப்படையோ, எவை எல்லாம் அவசியமோ அவை எல்லாம் இன்று முதலாளிகளின் லாபம் ஈட்டும் தொழிலாக மாறி உள்ளது.
தற்போது கூட புதுடெல்லியில் 110 நாட்களாக விவசாயிகள் போராடுவது விவசாயிகளுக்கான போராட்டம் மட்டும் அல்ல. 130 கோடி மக்களுக்கான போராட்டம். அதற்கு நாம் தமிழர் கட்சியும் ஆதரவு அளித்து வருகிறது.
11ஜி வரை செல்போன் வந்தாலும் கஞ்சி விவசாயி தான் உற்ற வேண்டும். இதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். உணவு சாப்பிடுகின்ற ஒவ்வொருவரும் விவசாயிகளை மறக்காமல் நன்றி உணர்வு இருந்தால் தயவு செய்து விவசாயிக்கு வாக்களியுங்கள்’’ என்றார்.