

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 97.88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (மார்ச் 5) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 1,314 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 13 பேருக்கும், காரைக்காலில் 13 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 71 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 105 பேரும் என மொத்தம் 176 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 669 ஆகவும், இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது. இன்று 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 979 (97.88 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் மொத்தமாக 6 லட்சத்து 35 ஆயிரத்து 847 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 5 லட்சத்து 91 ஆயிரத்து 471 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
32 நாட்களில் 10 ஆயிரத்து 398 சுகாதாரப் பணியாளர்களும், 21 நாட்களில் 2,495 முன்களப் பணியாளர்களும், 4 நாட்களில் 1,642 பொதுமக்களும் என 14 ஆயிரத்து 535 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.