ஆம்பூர் அரசு பள்ளி மாணவருக்கு கரோனா தொற்று: பள்ளி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது

ஆம்பூர் அரசு பள்ளி மாணவருக்கு கரோனா தொற்று: பள்ளி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது
Updated on
1 min read

ஆம்பூரில் அரசுப்பள்ளி மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சக மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கடந்த 2-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுடன் சளி, இருமல் இருந்ததால் மாணவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், மாணவருக்கு கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்திர ராஜன் தலைமையில், தூய்மைப் பணியாளர்கள் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கு விரைந்து சென்று 12-ம் வகுப்பறைகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.

வகுப்பறையில் இருந்த நாற்காலிகள், மேஜை, ஜன்னல், கதவு உள்ளிட்டவைகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப் பட்டது. மேலும், 12-ம் வகுப்பறையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவருடன் தொடர்பில் இருந்த 51 மாணவர் களுக்கும் கரோனா பரிசோ தனையை நேற்று மேற்கொண்டனர்.

இதற்கான முடிவு வெளியாகும் வரை அந்த வகுப்பறையை மூடி வைக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.

கரோனா பரவலை தடுக்க கடந்த 10 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அரசுப்பள்ளிகள் கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் திறக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது 12-ம் வகுப்பு மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in