

மதுரையில் போலீஸ் அனுமதிக்கும் வழித்தடத்தில் நாளை முதல் 3 நாட்கள் ராமர் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ரத யாத்திரை நடத்தி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. ரத யாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதை எதிர்த்து அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மதுரையில் 3 நாட்கள் காலை 9 முதல் பகல் 12 மணி வரை, மாலை 4 முதல் 6 மணி வரையிலும் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கலாம் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து மதுரையில் போலீஸார் அனுமதி வழங்கும் வழித்தடத்தில் நாளை (மார்ச் 4) முதல் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.