

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனிஉத்திர பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மார்ச் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் சப்தவிடங்க தலங்களில் தலைமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலமான இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழாவின் நிறைவாக நடைபெறும் ஆழித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
அதன்படி, நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரிய கொடியேற்றம் நேற்று காலைநடைபெற்றது. இதை முன்னிட்டு பிப்.28-ம் தேதி இரவுகுண்டையூரிலிருந்து பூதகணங்கள் நெல் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மருதப்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் கோயிலுக்கு சண்டிகேஸ்வரர் சென்று, அங்கிருந்து மண் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
நேற்று காலை சுவாமி வீதி உலாவுக்குப்பிறகு தியாகராஜர் சன்னதி முன்புறம் உள்ள கொடிமரத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றம் முடிந்ததும், தியாகராஜ சுவாமியிடம்கோயில் உள்துறை மணியமும், ஆதிசண்டிகேஸ்வரரிடம் ஓதுவாரும் லக்னப் பத்திரிகையை வாசித்தனர். இதில், தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் மார்ச் 25-ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.