Published : 02 Mar 2021 12:37 PM
Last Updated : 02 Mar 2021 12:37 PM

என் கட்சியில் சேர ரஜினி ரசிகர்கள் விருப்பம்; விரைவில் சந்திக்க உள்ளேன்: அர்ஜுன மூர்த்தி பேட்டி

விரைவில் ரஜினி ரசிகர்களைச் சந்திக்க உள்ளதாக ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகியும், இமமுக நிறுவனருமான அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, அர்ஜுன மூர்த்தியைத் தனது மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்தார்.

ஆனால், எதிர்பாராத விதமாக ரஜினி கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டதால் அர்ஜுன மூர்த்தி, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகினார். ஆனாலும், ரஜினியின் வழியைப் பின்பற்றுவேன் என்று பேட்டி அளித்த அர்ஜுன மூர்த்தி, இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் (இமமுக) என்கிற கட்சியை அண்மையில் தொடங்கினார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இமமுக போட்டியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே தலைமைத் தேர்தல் ஆணையம், அர்ஜுன மூர்த்தியின் இமமுக கட்சிக்கு 234 தொகுதிகளிலும் ரோபோ சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில் தான் போட்டியிடுவது குறித்துத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அர்ஜுன மூர்த்தி, ''நான் கட்சி ஆரம்பித்த பிறகு இன்றுகூட சில ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் என்னைச் சந்தித்துப் பேசினர். இமமுக கட்சிக்கு வர அவர்களுக்கு விருப்பம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், நான் மற்ற கட்சிகளைப் போல இல்லாமல் பொது மனிதராக இருப்பதால், என்னோடு இணைந்து பணியாற்ற அவர்களுக்கு எவ்விதக் கஷ்டமும் இல்லை. இன்று என்னைச் சந்தித்த ரஜினி ரசிகர் சொன்னதை வைத்து அந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் இனிமேல் எல்லா ரஜினி ரசிகர்களையும் தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேச ஆசைப்படுகிறேன்'' என்று அர்ஜுன மூர்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x