

சிவகங்கை அருகே டி.புதூர் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். இந்த மஞ்சு விரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
சிவகங்கை அருகே டி.புதூரில் தர்ம முனீஸ்வரர், இளங்கரைமுடைய அய்யனார், சோனையா, சிவசக்தி விநாயகர் கோயில்களில் மாசிக் களரி விழாவையொட்டி கண்மாய்ப் பொட்டலில் மஞ்சு விரட்டு நடந்தது. இதில் புதுக்கோட்டை,திருச்சி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 270 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மேலும் 45 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கினர்.
வயல்வெளிகளில் ஆங்காங்கே கட்டு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவகங்கை அரசு போக்குவரத்து பணிமனை அருகே அண்ணாநகர் பகுதி மக்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் மொத்தம் 14 மாடுகள் களமிறக்கப்பட்டன. ஒவ்வொரு மாட்டையும் அடக்க 9 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.