புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 20 பேர் பாதிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (பிப். 27) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 1,414 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 9 பேருக்கும், காரைக்காலில் 9 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும் என மொத்தம் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாஹேவில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.

மேலும், புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த 87 வயது முதியவர், தொற்று பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது. இதில், மருத்துவமனைகளில் 101 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 96 பேரும் என 197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 6 லட்சத்து 27 ஆயிரத்து 975 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 5 லட்சத்து 83 ஆயிரத்து 800 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, புதுச்சேரியில் 9,589 (28 நாட்களில்) சுகாதாரப் பணியாளர்களுக்கும், 740 (17 நாட்களில்) முன்களப் பணியாளர்களுக்கும் என, 10 ஆயிரத்து 329 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in