பயணிகளுக்கு பிடித்த விமான நிலையங்களில் மதுரைக்கு 2-ம் இடம்: முதல் இடத்தை பிடித்தது உதய்பூர்

பயணிகளுக்கு பிடித்த விமான நிலையங்களில் மதுரைக்கு 2-ம் இடம்: முதல் இடத்தை பிடித்தது உதய்பூர்
Updated on
1 min read

பயணிகளுக்குப் பிடித்த விமான நிலையங்கள் பட்டியலில் மதுரை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

இந்திய விமானத் துறை ஆணையம் ஆண்டுக்கு இருமுறை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் சேவை எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்கிறது.

அதன் அடிப்படையில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பட்டாலும் அதில் 50 விமான நிலையங்களில் மட்டுமே இந்த ஆய்வை இந்திய விமானத் துறை ஆணையம் மேற்கொண்டது. இதில், உதய்பூர் விமான நிலையம், 5-க்கு 4.85 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மதுரை விமான நிலையம் 4.80 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றது.

மதுரையைப் பொருத்தவரை வாடிக்கையாளர் சேவையில், விமான நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு உதவுவது, முனையத்தில் இருந்து விமான நிலையத் துக்குப் பயணிகளை அழைத்துச் செல்வது, பயணிகளுக்குத் தெரிவிக்கும் வகையில் உடனுக்குடன் எந்தெந்த நேரத்தில் புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள் பற்றிய அறிவிப்புகளைச் செய்வது, வாகன நிறுத்தம் ஆகியவை அதிக புள்ளிகள் பெறுவதற்குச் சாதகமாக இருந்தன.

ஆனால் உணவு, இணைய வசதி உள்ளிட்ட சில வசதிகள் புள்ளிகள் குறைவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. எதிர்காலத்தில் இந்தக் குறைபாடுகளைப் போக்கி, விமான நிலையத்தில் பய ணிகள் காத்திருக்கும் நேரத்தில் மதுரையின் சுற்றுலாத் தலங்கள் பற்றிய வீடியோ காட்சிகள், அதன் பாரம்பரியம் உள்ளிட்டவற்றை ஒளிபரப்பவும், பயணிகளுக்கு உதவும் விமான நிலையப் பணியாளர்களை கலாச்சார உடைகளை உடுத்த வைப்பது போன்ற சிறப்பு அம்சங்களை ஏற்படுத்தி அடுத்த முறை முதலிடம் பெற முயற்சிப்போம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in