மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு தந்த பெண்

மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு தந்த பெண்
Updated on
1 min read

பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்ததால் மூளைச்சாவு அடைந்த பழநி பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

பழநியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகரின் மனைவி பிரமிளா (52). இவர் பிப். 19-ம் தேதி இரவு பாலசமுத்திரத்தில் பொருட்கள் வாங்கி விட்டு மினி பேருந்தில் வந்தார். வீட்டின் அருகே பேருந்திலிருந்து இறங்கியபோது கீழே விழுந்து காயமடைந்தார்.பழநி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

பிப்ரவரி 20-ல் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடலில் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறு நீரகங்கள் மற்றும் கண்கள் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருந்தன. இதனால், உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க பிரமிளாவின் மகன்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மருத்துவக் குழுவினர் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை அகற்றினர்.

இதில் இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன. ஒரு சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளி களுக்குப் பொருத்தப்பட்டன.

மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in