ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு புகார் வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றம் தடை 

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு புகார் வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றம் தடை 
Updated on
1 min read

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்களை அவமதித்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரி ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டை அன்பகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்தும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்காக வருத்தம் தெரிவித்த ஆர்.பாரதி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

பட்டியலின மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக, ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மே மாதம் ஆர்.எஸ்.பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் தான் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக புகார் அளித்துவருவதால், அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதி வழக்கு விசாரணை வருகிற 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in