சென்னை வந்தார் பிரதமர் மோடி; மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்: 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

சென்னை வந்தார் பிரதமர் மோடி; மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்: 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார். அவரது பாதுகாப்புக்காக சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார்.

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைக்கும் அதே வேளையில் திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை விமான நிலையம் மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்கும், எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துறைமுக முனையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஆவடி டேங்க் ஃபேக்டரியில் உருவாக்கப்பட்ட பீரங்கி வண்டிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கரோனாவுக்குப் பின் சென்னை வந்துள்ள பிரதமர் மோடி மொத்தம் 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் செலவழிக்கிறார். விழா முடிந்தவுடன் பிரதமர் மோடி கொச்சிக்குச் செல்கிறார். டெல்லியிலிருந்து புறப்பட்ட அவர் சென்னைக்கு விமானம் மூலம் காலை 10.35 மணிக்கு வந்தடைந்தார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்துக்குச் சென்று அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியம் செல்கிறார். காலை 11.15 மணியிலிருந்து நண்பகல் 12.30 வரை சென்னை மெட்ரோ விம்கோ நகர் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். 12.35 லிருந்து 12.55 மணி வரை தமிழக தலைவர்களைச் சந்திக்கும் அவர், பின்னர் அவர் பகல் 1 மணிக்கு மீண்டும் கார் மூலம் ஹெலிகாப்டர் தளத்தை அடைகிறார்.

பிரதமர் சென்னையில் செலவழிக்கும் நேரம் 3 மணி நேரம் மட்டுமே. பிரதமரின் பாதுகாப்புக்காக சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டன. சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

பிரதமா் மோடி வரும்போதும், போகும்போதும் விமான நிலையத்தின் வெளிப்பகுதிக்கு வரவில்லை. பிரதமருக்கு வரவேற்பு, வழியனுப்புதல் அனைத்தும் சென்னை ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடில்தான் நடக்கிறது.

பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியத்தை ஒட்டிய பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, பிரதமர் போகும் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in