7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது: பாஜக மாநில துணைத்தலைவர் தகவல்

படவிளக்கம்:

திருப்பத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில துணைத்தலைவர் நரேந்திரன் பேசினார்.
படவிளக்கம்: திருப்பத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில துணைத்தலைவர் நரேந்திரன் பேசினார்.
Updated on
1 min read

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு தான் உண்டு என பாஜக மாநிலத்துணைத்தலைவர் நரேந்திரன் கூறியுள்ளார்.

திருப்பத்தூரில் மத்திய பட்ஜெட் விளக்கம்தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் நரேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு கரோனாவால் உலகமே முடக்கியது. இந்நிலையில்,மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.விவசாயம், உட்கட்டமைப்பு, சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

இதை, புரிந்துக்கொள்ளாத எதிர்கட்சிகள், மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்து வருகின்றனர்.ஒரு சில வியாபாரிகள் வெளிநாட்டு தூண்டுதல் பேரில் புதுடெல்லியின் போராட்டம் நடந்து வருகின்றனர்.தேசிய கொடி அவமதித்ததைக் கூட ராகுலும், மு.க. ஸ்டாலினும் நியாயப்படுத்துவது வேடிக்கையாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசு விதிக்கும் வரிதான் மிகப்பெரிய காரணம். மத்திய அரசு 13 சதவீதம் மட்டுமே வரி விதிக்கிறது. இதை ஜிஎஸ்டியில் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிக்கொடுப்பதை மட்டுமே பேசி வருகிறார். பொய்யான தகவல்களை ஒவ்வொரு கூட்டத்தில் பேசி வருவது மக்களுக்கு புரிய தொடங்கியுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு வெளிநாடுகளிடமிருந்தும் கடன் பெறவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டதை வெறும் கொலையாக பாஜக பார்க்கவில்லை. நாட்டின் ஒரு இளம் தலைவரை, அதுவும் பிரதமரை கொலை செய்து விட்டார்கள் என்ற கோணத்தில் தான் பாஜக அரசு பார்க்கிறது.

இதில் தொடர்புடைய7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு தான் இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிப்பெறும்.அதிமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம்.திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜக போட்டியிடும்.

அது எந்த தொகுதி என பின்னர் அறிவிக்கப்படும். பாஜக ஆட்சியில் அம்பானி, அதானி, போன்ற பெரிய குடும்பத்தினர் மட்டுமே வளர்ச்சி பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. அவர்களை வளர்த்ததே காங்கிரஸ் ஆட்சியில் தான்.

சசிகலா விடுதலை விவகாரம் அதிமுக கட்சிக்குட்பட்ட பிரச்னை அது குறித்து கருத்துகூற நாங்கள் விரும்பவில்லை’’என்றார்.

நிகழ்ச்சியில், பாஜக மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட துணை தலைவர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in