

புதுச்சேரியில் புதிதாக 27 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (பிப்.2) கூறியதாவது:
''புதுச்சேரி மாநிலத்தில் 2,275 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 18 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என மொத்தம் 27 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. மேலும், உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 651 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 39 ஆயிரத்து 123 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் மருத்துவமனைகளில் 125 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 161 பேரும் என மொத்தம் 286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 186 (97.60 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 79 ஆயிரத்து 841 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 222 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது''.
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.