

சென்னை வேளச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, வேளச்சேரி வட்டம், அஷ்டலட்சுமி நகர், 5-வது தெருவில், 22.11.2015 அன்று மேல்நிலை மின்கம்பி மழை மற்றும் காற்றினால் திடீரென அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகர், 6-வது தெருவைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மழை மற்றும் காற்றினால் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.