பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது; திமுகவுக்கே கிடைத்தது போன்றது: ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து

பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது; திமுகவுக்கே கிடைத்தது போன்றது: ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து
Updated on
1 min read

குடியரசு தினத்தில் பத்ம விருதுகள் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று தன் முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

“திமுக முன்னோடியும் 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாயுமான பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் கிடைத்திருக்கும் பெருமை. அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர் மட்டுமல்ல, கட்சியின் போராட்டங்களிலும் முன் நிற்பவர்.

அவருக்கும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகக் கலைச்செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

அடுத்த பதிவில் அவர் கூறியதாவது:

ஏகாதிபத்திய வெள்ளையர்களால் ஆளப்பட்ட அடிமை அரசில் இருந்து விடுதலை பெற்று - நமக்கு நாமே ஒரு குடியரசையும் சட்டத்தையும் உருவாக்கி ஆளத் தொடங்கிய நாள் ஜனவரி 26, குடியரசு தினம், இந்தியக் குடிமக்களின் தினம்.

இந்திய நிர்வாகம் என்பது ஜனநாயக - சமத்துவ - சகோதரத்துவ - அறநெறி விழுமியங்களுடன் செயல்படும் என்பதை நாம் உலகுக்குச் சொன்ன நாள் இது. அதே நெறிமுறைகளுடன் எந்நாளும் வாழ்வோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in