சத்திரக்குடியில் 2 வேன்கள் மோதல்: கீழக்கரையைச் சேர்ந்த 3 பேர் மரணம்

சத்திரக்குடியில் 2 வேன்கள் மோதல்: கீழக்கரையைச் சேர்ந்த 3 பேர் மரணம்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி தபால் சாவடி அருகே ராமேசுவரம் வந்த சுற்றுலா வேனும், மற்றொரு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கீழக்கரையைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கீழக்கரையில் இருந்து குவைத் செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு ஆம்னி வேனில் இன்று காலை கீழக்கரை 500 பிளாட் பகுதியைச் சேர்ந்த ஹாஜா ஷாகுல் ஹமீது, அவரது மனைவி ரூபினா, மகள் ரஹ்மத் பாத்திமா, மகன் இனாஸ், அவரது மாமியார் ஷாஜகான் பிவீ ஆகிய 5 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

கீழக்கரையைச் சேர்ந்த அகமது ஹாசன் என்பவர் வேனை ஓட்டிச் சென்றார். சத்திரக்குடி தபால்சாவடி அருகே சென்றபோது எதிரே கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் இருந்து ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்த வேனும், கீழக்கரையில் இருந்து சென்ற ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்னி வேனில் பயணம் செய்த ஹாஜா சாகுல் ஹமீது(52), இவரது மாமியார் ஷாஜகான் பீவி(60), ஓட்டுநர் அகமது ஹாசன்(30) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். இதில் ரூபினா, ரஹ்மத் பாத்திமா, மகன் இனாஸ் ஆகியோர் மற்றும் கர்நாடக வேனில் வந்த 3 பேர் என 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து சத்திரக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in