பார்க்கிங் வசதி இல்லாமல் ஸ்தம்பிக்கும் மதுரை மாநகர்: போக்குவரத்து நெரிசலுக்கு மாநகராட்சி தீர்வு காணுமா?

முறையான பார்க்கிங் வசதியில்லாததால் மதுரை நேதாஜி ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
முறையான பார்க்கிங் வசதியில்லாததால் மதுரை நேதாஜி ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை மாநகரில் பார்க்கிங் வசதி முறையாக செய்து தரப் படாததால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். இப்பிரச் சினைக்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரு ஊரின் வளர்ச்சி, அந்த ஊரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டில்தான் இருக்கிறது. விசாலமான சாலைகள், தேவையான இடங்களில் பாலங் கள், பார்க்கிங் வசதிகள் போன் றவையே போக்குவரத்து சீராக நடப்பதற்கான அடிப்படையாக உள்ளன. ஆனால், மதுரையில் அத்தகைய வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள், நேதாஜி சாலை உள்ளிட்டவை விசாலமாக இருந்தன. பிரபல வணிக நிறுவனங்கள் அனைத்தும் இந்த வீதிகளில்தான் உள்ளன. தற்போது ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த சாலைகள் முன்பைவிட குறுகிவிட்டன. மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதிகள் இல்லை. வணிக நிறுவனங்களின் முன்பும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியவில்லை.

இதேபோல், தாசில்தார் நகர், கோரிப்பாளையம், கே.கே. நகர், அண்ணா நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், சிம்மக்கல், பெரியார் பஸ்நிலையம் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் பார்க்கிங் செய்வதில் பிரச்சினை உள்ளது.

சாலையோரங்களில் வாக னங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த ராஜ் கூறுகையில், மதுரை நகரின் முக்கிய இடங்களான மீனாட்சியம்மன் கோயில், மாசி வீதிகள், விளக்குத்தூண், அண்ணா நகர், கோரிப்பாளையம், காளவாசல், சிம்மக்கல், முனிச்சாலை, பெரியார் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நகருக்குள் ஆக்கிரமிப்புகள், விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களால் சாலையோரங்களில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது.

பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படுகிறது. இந்த வசதியை நகரின் பிற முக்கிய பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாத வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அந்த வசதியை ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படுகிறது. இதேபோல், நகரின் பிற பகுதிகளிலும் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in