காரைக்காலில் முற்றுகைப் போராட்டம்: புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் கைது

காரைக்காலில் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக பணிமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்
காரைக்காலில் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக பணிமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்
Updated on
1 min read

காரைக்காலில் புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகப் பணிமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய ஒப்பந்த ஊழியர்கள் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக, காரைக்கால் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்கள் 42 பேர் பணியாற்றி வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 6 மாத கால ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக கடந்த ஒரு மாத காலமாக வேலை நிறுத்தம் செய்து பணிமனைப் பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜன.21) காலை திடீரெனப் பேருந்துகளை வெளியே எடுக்க முடியாத வகையில், பணி மனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காரைக்கால் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தைக் கைவிடாத காரணத்தால், போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in