

கடந்த ஆண்டு கரோனாவால் தடைப்பட்ட சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு, மாசி வீதிகள், சித்திரை வீதிகளில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக குழிதோண்டி பாதி முடிந்தும், முடியாத நிலையில் விட்டுள்ள பணிகளால் தடைபடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த விழாவில் மாசிவீதிகளில் நடக்கும் தேர்த்திருவிழா விஷேசமானது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாசிவீதிகளில் திரண்டு தேரை வடம்பிடித்து இழுப்பதும், தேரில் வரும் சாமிகளை பக்தியுடன் வணங்குவதுமாக சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடக்கும்.
அதுபோல், இந்த சித்திரைத் திருவிழாவில் சாமி ஊர்வலங்கள், மாசி வீதிகள், சித்திரை வீதிகளில் தினமும் காலையும், மாலையும் உலா வரும். அதைக் காண பக்தர்கள் குடும்பம், குடும்பமாக மீனாட்சியம்மன் பகுதியில் குவிவார்கள்.
அதனால், இந்தத் திருவிழா நாட்களில் மாசி வீதிகள், சித்திரை வீதிகள், வெளிவீதிகளில் வாகனங்களில் செல்ல முடியாது. அந்தளவுக்கும் மக்கள் கூட்டதால் இந்த வீதிகள் நிரம்பி வழியும்.கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவியதால் மீனாட்சியம்மன் கோயில் திருவிழா தடைபட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா தொற்று குறைந்ததால் கோயில் திருவிழாக்கள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வழக்கம்போல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆனால், மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் கோயில் நிர்வாகமும், பக்தர்களும் வழக்கம்போல் சிறப்பாக சித்திரைத் திருவிழாவை கொண்டாட முடியுமா? எனக் கவலையடைந்துள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டியின் முக்கிய திட்டங்கள் அனைத்தும் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளிலேயே நடக்கிறது. இந்தத் திட்டங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடக்கின்றன.
இதற்காக இந்த வீதிகளில் ஆண்டுக்கணக்கில் குழிதோண்டிபோட்டு மழைக்காலத்தில் தெப்பம்போல் தண்ணீர் தேங்குவதும், வெயில் காலத்தில் புழுதி வாரி இறைப்பதுமாக மாசி வீதி, சித்திரை வீதிகளில் வசிக்கும் மக்கள், வியாபாரம் செய்யும் வணிகர்கள் மிகுந்த துயமும், சிரமமும் அடைந்துள்ளனர்.
குறிப்பாக மாசி வீதிகள், சித்திரை வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நடக்க ஆரம்பித்தப்பிறகு 50 சதவீத்திற்கு மேல் வியாபாரம் குறைந்து வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் சாலைக்காகவும், பாதாள சாக்கடைக்காகவும், குடிநீருக்காகவும் குழிதோண்டிப்போட்டு பாதி முடித்தும், முடிக்காமலும் அறையும் குறையுமாக நடக்கிறது.
அதனால், வாகனங்களில் மக்கள் இந்த சாலைகளைக் கடக்க முடியவில்லை. பெரும் நிறுவனங்களே கடந்த தீபாவளிப் பண்டிகை நாட்களில் போதிய வியாபாரம் இல்லாமல் பெரும் பாதிப்பை சந்தித்தன. சிறு, குறு வியாபாரிகள் கடைகளைத் தொடர்ந்து நடத்த முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
மழைக்காலத்தில் சாலைகளில் தெப்பம் போல் தண்ணீர் தேங்குவதால் வாடிக்கையாளர்கள் வரத் தயங்குகின்றனர். தற்போது சித்திரைத் திருவிழாக்கள் மாசி வீதிகள், சித்திரை வீதிகளை மையமாக கொண்டே நடக்கும்.
ஆனால், தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகளால் இந்த ஆண்டு திருவிழா வழக்கம்போல் நடக்குமா? என்ற கவலை பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மாசி வீதிகள், சித்திரை வீதிகளில் புதிதாக குழிகள் தோண்டப்படவில்லை. தோண்டிய இடங்களில் பணிகள் இரவு, பகலாக நடக்கின்றன என்றனர்.