புதுவை பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் மரணம்: தலைவர்கள் அஞ்சலி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுவை பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஆளுநர் கிரண்பேடி, முதல்வ்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

புதுவை சட்டப்பேரவையில் பாஜக நியமன எம்எல்ஏவாக இருந்தவர் சங்கர். அவருக்கு இன்று (ஜன.17) அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். மறைந்த சங்கர் எம்எல்ஏவுக்கு 70 வயதாகிறது.

இவரது மறைவால் புதுவை சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்துள்ளது.

பாஜகவில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த சங்கரைக் கவுரவிக்கும் வகையில், கட்சியில் அவருக்கு நியமன எம்எல்ஏ பதவி அளிக்கப்பட்டிருந்தது.

சங்கர் எம்எல்ஏவின் உடல் இளங்கோ நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது அவரது உடலுக்குப் புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுவாமிநாதன், புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சிப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதியாக கருவடிக்குப்பம் இடுகாட்டில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in