

போகி பண்டிகையின்போது தேவையற்ற பொருட்களை எரித்ததால், சென்னையின் அனைத்துமண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்று மாசு அதிகரித்துள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்சார்பில், போகி பண்டிகையின் போது பொதுமக்கள் ரப்பர் பொருட்கள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் போன்ற அடர் புகையை வெளியிடும் பொருட்களை எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் சென்னையில் நேற்று அதிகாலை போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபழைய பொருட்களை, வெளியில்கொட்டி எரித்தனர். பொதுமக்கள்எரித்த பொருட்களால், புதன்கிழமை காலை மாநகரம் முழுவதும் பனி மூட்டம் போல புகை மூட்டம் நிலவியது. இதனால் காலை நேரத்தில் ரயில்கள் மற்றும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோரை கொண்ட 32 குழுக்கள் புதன்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சென்னையில் 15 இடங்களில் காற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
போகி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை மேற்கொண்ட ரோந்து பணியின்போது, சில இடங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவைதண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டன. சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12-ம் தேதி காலை 8 மணி முதல் 13-ம் தேதி காலை 8 மணி வரை மேற்கொண்ட காற்று தர பரிசோதனையில் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே (ஒரு கனமீட்டர் காற்றில் 80 மைக்ரோகிராம் இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவு) இருந்தன.
காற்றில் கலந்துள்ள 2.5 மைக்ரான் அளவுள்ள நுண்துகள்கள் ஒரு கனமீட்டர் காற்றில் குறைந்தபட்சமாக 52 மைக்ரோகிராம், அதிகபட்சமாக 102 மைக்ரோகிராமாக இருந்தது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு 60 மைக்ரோ கிராம் ஆகும்.
காற்றில் கலந்துள்ள 10 மைக்ரான் அளவுள்ள நுண்துகள்கள் ஒரு கனமீட்டர் காற்றில்குறைந்தபட்சமாக 103 மைக்ரோகிராம், அதிகபட்சமாக 256 மைக்ரோகிராமாக இருந்தது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு 100 மைக்ரோ கிராம் ஆகும். காற்றுத் தரக்குறியீட்டை பொருத்தமட்டில், குறைந்தபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 113 ஆகவும், அம்பத்தூர் மண்டலத்தில் 241 ஆகவும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.