குஷ்பு, வடிவேல் போல் கமலுக்கும் கூட்டம் கூடும்; ஆனால் அது வாக்குகளாக மாறாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

குஷ்பு, வடிவேல் போல் கமலுக்கும் கூட்டம் கூடும்; ஆனால் அது வாக்குகளாக மாறாது: அமைச்சர் செல்லூர் ராஜூ
Updated on
1 min read

குஷ்புவுக்கும், வடிவேலுவுக்கும் கூட்டம் கூடியும் திமுகவால் ஜெயிக்க முடியவில்லை. அதுபோல், தற்போது கமலுக்கு கூட்டம் கூடுகிறது. ஆனால், அது வாக்குகளாக மாறாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை தனியார் திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. தேர்தலுக்கான வியூகம் உள்ளது. அவர் ஆதரவு தெரிவிப்பார், இவர் சொல்வார் என்று நாங்கள் எதார்பார்க்கவில்லை.

ரஜினிகாந்துக்கு யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது தெரியும். பஞ்ச பூதங்களில் ஊழல் செய்தவர்கள் திமுகவினர். உதயநிதி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். அவர் தன் போக்கில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். தந்தை எவ்வழியோ அதையே மகன் செய்கிறார். உதயநிதியின் பரப்புரை விமர்சனங்கள் மக்களை பாதிக்கிறது.

உதயநிதி அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். நடிகருக்கு கூட்டம் கூடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 2011ம் தேர்தலில் குஷ்புவுக்கும் வடிவேலுவுக்கும் கூட்டம் கூடியது. ஆனால் திமுகவால் ஜெயிக்க முடியவில்லை.

அதனால், நடிகர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறும் என்று நினைக்க முடியாது. நடிகர் கமலஹாசனை காண மக்கள் கூட்டம் கூடும். ஆனால் வாக்காக மாறாது.

மிகப்பெரிய அடித்தளம் உள்ள திமுக நடிகர்கள் பிரச்சாரம் செய்த போது அக்கட்சி தோற்றது. கமலஹாசன் எம்மாத்திரம். எங்களுடன் கூட்டணி அமைப்பவர்கள் வெற்றி பெற நாங்கள் உழைப்போம். முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமியை ஏற்பவர்களோடு தேர்தலை சந்திப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in