

புதுச்சேரியில் இன்று புதிதாக 30 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன.10) கூறியதாவது:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,050 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 22 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என மொத்தம் 30 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சின்னசாமி நகரைச் சேர்ந்த 76 வயது முதியவர், காரைக்கால், திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 455 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 156 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 160 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 501 (97.52 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 16 ஆயிரத்து 36 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 73 ஆயிரத்து 48 பரிசோதனைகளுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது’’.
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.