சுதந்திரப்போராட்ட தியாகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சுதந்திரப்போராட்ட தியாகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

சுதந்திரப் போரட்ட தியாகிக்கு பென்ஷன் வழங்க உத்தரவிட்டும் நிறைவேற்றாத மத்திய மாநில அரசுகள் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், சவுலுப்பட்டியை சேர்ந்த 101 வயதான வடிவேலு, சுதந்திர போராட்டத்தின்போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டவர். அப்போது, அவர் கைதாகி கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரி அள்ளிபுரம் சிறையில் 7 மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

இதன்மூலம் சுதந்திர போராட்ட வீரருக்கான பென்ஷன் கேட்டு மத்திய அரசிடம் 1985-ம் ஆண்டு விண்ணப்பித்தபோது, தாமதமான விண்ணப்பித்ததாக கூறி, மத்திய உள்துறை துணை செயலாளர் அந்த விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.

பின்னர் 1996-ம் ஆண்டு தமிழக அரசிடம் சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி 2001 முதல் பென்ஷன் வாங்கி வருகிறார்.

இந்நிலையில் மத்திய அரசு ஓய்வூதியம் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வடிவேலுவின் கோரிக்கையை 8 வாரத்தில் பரிசீலித்து முடிவெடிக்க வேண்டுமென 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை மத்திய அரசிற்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்காமல் வேண்டுமென்றே உத்தரவை அவமதிப்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வடிவேலு தொடர்ந்துள்ளார். அதில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, துணை செயலாளர் ரீனா மிர்ரா, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.கோவிந்தராஜ், மத்திய - மாநில அரசு அதிகாரிகள் ஜனவரி 29-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in