விருத்தாச்சலம் அருகே சடலத்தைக் கட்டையின் மீது வைத்து வெள்ளத்தில் நீந்தி எடுத்துச் செல்லும் அவலம்

விருத்தாச்சலத்தை அடுத்த சொட்டவனத்தில் உயிரிழந்த ரத்தினம் என்பவரது உடலைக் கட்டையில் கட்டி ஆற்றில் மிதக்கவிட்டுத் தூக்கிச் சென்ற உறவினர்கள்.
விருத்தாச்சலத்தை அடுத்த சொட்டவனத்தில் உயிரிழந்த ரத்தினம் என்பவரது உடலைக் கட்டையில் கட்டி ஆற்றில் மிதக்கவிட்டுத் தூக்கிச் சென்ற உறவினர்கள்.
Updated on
1 min read

விருத்தாச்சலம் அருகே சொட்டவனம் கிராமத்திலிருந்து மயானத்திற்குச் சாலை வசதி இல்லாததால், சடலத்தைக் கட்டையில் கட்டி ஆற்றில் மிதக்கவிட்டு மயானத்திற்குக் கொண்டு சென்ற அவலம் அரங்கேறியது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மணிமுக்தா ஆற்றை ஒட்டி சொட்டவனம் கிராமம் உள்ளது. மணிமுக்தா ஆற்றின் வடக்குப் பகுதியில் சொட்டவனம் கிராமம் அமைந்த நிலையில், தெற்குப் பகுதியில் உள்ள கரைக்கு அருகே மயானம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் எவரேனும் இறந்தால், வறண்ட ஆற்றின் வழியே தூக்கிச் சென்று அடக்கம் செய்வதை வாடிக்கையாகிக் கொண்டிருந்தனர் சொட்டவனம் கிராம மக்கள்

இந்த நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி ரத்தினம் (74), இன்று (ஜன. 09) அதிகாலை உயிரிழந்தார். தொடர் கனமழை காரணமாக மணிமுக்தா ஆற்றில் விநாடிக்கு சுமார் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால், ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி கழுத்தளவு தண்ணீர் செல்வதால் எவரும் இறங்கிச் செல்லமுடியாத நிலை உள்ளது. இருப்பினும், ரத்தினம்மாள் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்லவேண்டியிருந்ததால், அவரது சடலத்தை உறவினர்கள் கட்டையில் கட்டி, மிதக்கவிட்டபடி மயானத்திற்குக் கொண்டு சென்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 10-ம் தேதி விருத்தாச்சலத்தை அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மனைவி செல்லம்மாள் என்பவர் உயிரிழந்தபோது, ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியதால் அவரது சடலமும் கட்டையில் கட்டி மிதக்கவிட்டு மயானத்திற்குக் கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in