

"இந்தியாவில் கரோனா தடுப்பூசியில் வெளிப்படைத் தன்மை இல்லை" என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.
அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டத்திற்கு எதிராக மட்டுமல்ல, அது மத்திய அரசின் ஆவணத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம்.
அவர்களது ஆணவம் இருக்கும் வரை விவசாயம் போராட்டம் தொடரும். மத்திய அரசு யாரையும் கலந்து ஆலோசிப்பது கிடையாது. எடுத்தேன், முடித்தேன் என்ற ஆணவ போக்கோடு செயல்படுகிறது.
நாளை காலை பிரதமர் மோடி காகத்தை வெள்ளை என்று சொன்னால், அதை பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றி விடுவார்கள். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். எங்கள் கூட்டணிக்கு புதிய அரசியல் கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அதன்பிறகு தான் தொகுதி ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும்.
இந்த அரசின் திட்டங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறோம். அதை பற்றி அமைச்சர் பாஸ்கரன் பேசாமல், நாங்கள் காரில் வருகிறோம், வேட்டி, சட்டை அணிகிறோம், கடிகாரம் கட்டுகிறோம் என பேசி வருவது மேடை பேச்சுக்கு கூட அழகல்ல. அது அபத்தமானது.
இந்த அரசின் ஊழலை வேறு எங்கும் தேட வேண்டாம். காரைக்குடி பாதாளச் சாக்கடை திட்டத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் ஒரே நிறுவனம் தான் பாதாளச் சாக்கடை பணியை எடுத்துள்ளது. அந்நிறுவனம் பணியைத் தரமாக செய்யவில்லை.
அனைத்து மாணவர்களிடமும் இணையம் ஸ்மார்ட் போன் வசதி இருக்க வாய்ப்பில்லை. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காவது பள்ளிகள் திறப்பதை வரவேற்கிறேன். மற்ற நாடுகளை போன்று இந்தியாவில் கரோனா தடுப்பூசியில் வெளிப்படை தன்மை இல்லை, என்று கூறினார்.