

புதுச்சேரியில் இன்று மேலும் ஒருவர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ள நிலையில், 35 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன. 07) தெரிவித்திருப்பதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் 3,377 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-15, காரைக்கால்-7, ஏனாம்-1, மாஹே-12 பேர் என மொத்தம் 35 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், காரைக்கால் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 369 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மருத்துவமனைகளில் 149 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 210 பேரும் என 359 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 47 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 374 (97.41 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 5 லட்சத்து 6 ஆயிரத்து 15 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 4 லட்சத்து 63 ஆயிரத்து 49 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.