

புதுச்சேரியில் இன்று புதிதாக 34 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன.06) கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் 3,557 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 22 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 34 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 635 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை 38 ஆயிரத்து 334 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 215 பேரும் என 372 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 327 (97.37 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 5 லட்சத்து 2 ஆயிரத்து 58 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது. இவற்றில், 4 லட்சத்து 59 ஆயிரத்து 609 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.