ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்; தவறாக விமர்சனம் செய்யக் கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்; தவறாக விமர்சனம் செய்யக் கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read

ரஜினிகாந்தின் முடிவு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். அவர் அரசியலுக்கு வந்தால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைத்தவர்கள்தான் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டி:

“ரஜினியின் அறிக்கை ஒட்டுமொத்த மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும்கூட ஏற்றுக்கொள்கிறோம். ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் அரசியல் வாழ்க்கை பாழாகிவிடும் என்று எந்த அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தார்களோ அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற ஒட்டுமொத்தமான சிந்தனை உண்டு. அனைத்துக் கட்சிகளிலும் நல்லவர்கள் வரவேண்டும், அவரவர்கள் கட்சியை மிக உன்னதமான நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதனால் புதியவர்கள் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்றோம்.

பாஜக இதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை. பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக எனப் பார்க்காமல் மொத்தமாகப் பார்த்தால் மிகப்பெரிய ஏமாற்றம் தரக்கூடிய விஷயமாக இருந்தாலுங்கூட அவர் தெளிவாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நான் அரசியலுக்கு வந்தால் மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவனாக வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் வரவில்லை என மிகத்தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் சூப்பர் ஸ்டார் இன்று உலக சூப்பர் ஸ்டாராக இருக்கக்கூடிய எங்கள் அரசியல் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான். அவரது பெயருக்கும், புகழுக்கும் யாரையும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதை திமுக, அதிமுக என அனைத்துக் கட்சியினரும் விரும்புவார்கள்.

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லாத கட்சி ஒன்றைச் சொல்லுங்கள். நிச்சயமாக எல்லோரும் விரும்புவார்கள். பாஜக எங்கள் கொள்கையைப் பரப்ப வாருங்கள் என்று ரஜினியை அழைத்தது கிடையாது. எந்த அழுத்தத்தையும் அவருக்குக் கொடுத்தது கிடையாது. கொடுக்கவேண்டிய தேவையும் இல்லை.

ரஜினி கலைத்துறையைச் சேர்ந்த நல்ல மனிதர், மனிதாபிமானம் மிக்கவர். நாட்டுப்பற்று மிக்கவர். இத்தனை வருடமாக தமிழ்நாட்டில் நான் நடித்துள்ளேன், அவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அதில் என்ன தவறிருக்க முடியும். இதில் இரண்டாவது கருத்தை ஏன் சொல்லவேண்டும். அதேபோன்று வரவில்லை என்பதற்காக தவறாக விமர்சனம் செய்வது கூடாது”.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in