Published : 27 Dec 2020 11:27 AM
Last Updated : 27 Dec 2020 11:27 AM

சிவகங்கை அருகே பிரமிக்க வைக்கும் அதிசயப் பாறைகள்: பலநூறு ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கிறது

சிவகங்கை அருகே பல்வேறு அமைப்புகளுடன், காற்றில் கரையும் அதிசயப் பாறைகள் காணப்படுகின்றன. இந்தப் பாறை கள் காண்போரை பிரமிக்க வைக் கின்றன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவ கங்கையில் பல்வேறு தொல் லியல் எச்சங்களும், இயற்கையான அமைப்புகளும் காணப்படுகின்றன. திருமலையில் இருந்து மலம்பட்டி வரை ஆங்காங்கே சிறு, சிறு மலைக்குன்றுகள் காணப் படுகின்றன. இதில் ஏரியூர் மலைக் குன்றில் 15 டன் எடை கொண்ட ஆகாச பாறை உள்ளது.

இந்த பாறை நுனியில் நிற்கிறது. அதே போல், அதன் அருகில் சில கி.மீ. தொலைவில் திருமன்பட்டி பகுதியில் உள்ள குன்றில், பல்வேறு வடிவங்களில் அடுக்கி வைத்தாற்போல் பாறைகள் காணப்படுகின்றன.

இந்தப் பாறைகளை அருகில் சென்று பார்த்தால் உருண்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படும். ஆனால், பல நூறு ஆண்டுகளாக இந்தப் பாறைகள் அப்படியே உள்ளன. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வீசும் காற்றால் சற்று சேதமடைந்து பாறைகள் கரைந்து வருகின்றன. அருகிலேயே மூன்று நபர்கள் சென்று வரும் அளவுக்கு நரி குகையும் உள்ளது. இந்தக் குகை கோடைக்காலத்திலும் குளிர்ச்சியைத் தரும்.

இதேபோல் ஏராளமான அடுக்குப் பாறைகள் உள்ளன. அவற்றை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டுமென அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் ரமேஷ் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அறியப்படாத சுற்றுலாத் தலங்கள் உள்ளன. காற்றில் கரையும் அதிசய பாறைகள் திருமண்பட்டி-மலம்பட்டி அருகே உள்ள குன்றில் காணப்படுகின்றன. அவை ஏரியூர் ஆகாசப்பாறை போன்று உள்ளன. ராணுவ நடை போல கம்பீரமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு பாறையும் கூழாங்கற்களை அடுக்கியது போல் அழகுறக்காட்சி தருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும், இந்த இடத்தில் ஏராளமான சுனைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் வற்றுவதில்லை.

திருமலை, ஏரியூர், திருமன்பட்டி பகுதியைச் சுற்றுலாத் தலமாக அறிவித்தால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x