

புதுச்சேரியில் இன்று புதிதாக 33 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இறந்தோர் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 26) கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் 3,391 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-18, காரைக்கால்-4, ஏனாம்-2, மாஹே-9 பேர் என மொத்தம் 33 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 77 வயது முதியவர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 947 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மருத்துவமனைகளில் 172 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 183 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 962 (97.40 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 4 லட்சத்து 70 ஆயிரத்து 201 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 4 லட்சத்து 27 ஆயிரத்து 942 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.