வடசென்னையில் காற்று மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

வடசென்னையில் காற்று மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

வடசென்னையில் காற்று மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வட சென்னை பகுதிகளில் இயங்கிவரும் வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையம், சிபிசிஎல், தமிழ்நாடு பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், மணலி பெட்ரோ கெமிக்கல்நிறுவனம், மெட்ராஸ் உரத் தொழிற்சாலை ஆகிய 6 நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளையும், நிபந்தனைகளையும் மீறி வருகின்றன. அதன் காரணமாக வடசென்னை பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு விதிகளும் முறையாக பின்பற்றப்படுதில்லை.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் கண்டுபிடிக்கும் குறைபாடுகளை, தொடர்புடைய நிறுவனங்களிடம் தெரிவித்தாலும், அதை சீரமைப்பதில் அந்நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான செய்தி, இதழ் ஒன்றில் வெளியானது. அதை அடிப்படையாககொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.

6 நிறுவனங்கள்

இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது.அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தொடர்புடைய 6 நிறுவனங்கள் இயங்கும் பகுதிகளை மிகவும் மாசடைந்த பகுதிகளாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. வடசென்னை பகுதியை மாசு இல்லாத பகுதியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுஉத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தாலும், பசுமை தீர்ப்பாயத்தாலும் எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அப்பகுதியில் வாழும் மக்களை பாதுகாக்கதொடர்புடைய அரசுத் துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், காற்று மாசுவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே அப்பகுதியில் மாசு ஏற்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக மூத்த அதிகாரி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி, அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் ஆகியோர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது.

ஆய்வு செய்ய வேண்டும்

இக்குழு வடசென்னை பகுதியில் காற்று மாசு ஏற்படுவதற்கான காரணங்கள், சுற்றுச்சூழல் விதிகள், தொழிற்சாலை அனுமதி பெறும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆகியவை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். அங்கு காற்றின் தரத்தையும் தனியாக கண்காணிக்க வேண்டும். இந்த விவரங்கள் அடங்கிய ஆய்வு அறிக்கையை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான பிப்ரவரி 15-ம்தேதிக்குள் அமர்வில் தாக்கல்செய்ய வேண்டும். மாசு ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்த விவரங்களும் அறிக்கையில் இடம்பெற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in