திருச்சி பாரதிதாசன் பல்கலை. ஆசிரியர் நியமன அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி பாரதிதாசன் பல்கலை. ஆசிரியர் நியமன அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர் எம்.எஸ்.பாலமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 உதவிப் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், நியமனம் தொடர்பாக 8.7.2019-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணை கடந்த 20 ஆண்டுகளாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் இருந்து மாறுபட்டிருந்தது.

அறிவிப்பாணையில் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் காலியிடம், இடஒதுக்கீட்டு பணியிடங்கள், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை அறிவிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் மொத்த பணியிடத்துக்கும் ஒரே அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, இடஒதுக்கீட்டு விதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது.

விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in