

சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் பலரும் சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து, விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவ.15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக சுவாமி தரிசனத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். பரிசோதனை செய்துகரோனா இல்லை என்ற சான்றிதழ்கட்டாயம். சந்நிதானம், பம்பையில் தங்குவதற்கு தடை என்பது உட் பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி 18 படிகள் ஏறி சுவாமியை தரிசனம் செய்து விரதத்தை முடித்தனர்.
சென்னையில் மகாலிங்கபுரம், அண்ணாநகர், கே.கே.நகர், மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்கின்றனர்.