

சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சி சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று தொடங்கியது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்உள்ள காலி இடங்கள், நீர்நிலை ஓரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் ‘மியாவாக்கி’ எனும் அடர்த்தியான மரங்கள் அடங்கிய நகர்ப்புற அடர்வனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கோட்டூர்புரம், வளசரவாக்கம் ராயலாநகர், சோழிங்கநல்லூர் மண்டலம் 197-வது வார்டு மாதிரி பள்ளி சாலை, கே.கே.நகர், மாநகராட்சியின் மணலி மண்டல அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு இடத்தில் 25 பாரம்பரிய வகைகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டது. இத்திட்டம் ‘துவக்கம்’ என்ற தொண்டு நிறுவனம் மூலமாகமேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் தொடக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் சுகாதாரத்துறை செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்,நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங்கிணைப்புஅலுவலர் ஆனந்தகுமார், மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையர் பி.ஆகாஷ், ராயபுரம் மண்டல அலுவலர் ராமபிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.