இன்று முதல் புதுச்சேரியிலிருந்து குமுளி மற்றும் திருப்பதிக்கு இரவு நேர பிஆர்டிசி பேருந்துகள் இயக்கம்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரியிலிருந்து குமுளி செல்லும் பேருந்து மற்றும் திருப்பதி செல்லும் இரவு நேர பிஆர்டிசி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புதுச்சேரியில் பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டது. இதனிடையே, மத்திய அரசு அளித்த தளர்வுகளை அடுத்து, புதுச்சேரியில் மே 20ஆம் தேதி முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தொடர்ந்து, கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களுக்குப் பொதுப் போக்குவரத்து இயக்கப்பட்டது. இதனிடையே, புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு பிஆர்டிசி பேருந்து கடந்த 11-ம் தேதி முதல் காலை நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (டிச.16) முதல் புதுச்சேரியிலிருந்து குமுளிக்கு பிஆர்டிசி பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து புதுச்சேரியிலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்படுகிறது. இதே பேருந்து குமுளியிலிருந்து புதுச்சேரிக்கு மாலை 5 மணிக்குப் புறப்படும். இதற்கான பயணக் கட்டணம் முன்பதிவுக் கட்டணத்துடன் சேர்த்து ரூ.425 வசூலிக்கப்படுகிறது.

இதேபோல், ஏற்கெனவே காலை நேரத்தில் திருப்பதிக்கு பிஆர்டிசி பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் இரவு நேரப் பேருந்தும் புதுச்சேரியிலிருந்து இயக்கப்படுகிறது. இரவு 10 மணிக்குப் புறப்படும் இந்தப் பேருந்து, மீண்டும் திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு காலை 6 மணிக்குப் புறப்படும். இதற்கான கட்டணமாக முன்பதிவுக் கட்டணத்துடன் ரூ.255 வசூலிக்கப்படுகிறது என்று பிஆர்டிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் இருந்து குமுளி மற்றும் திருப்பதிக்கு பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படுவதால் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களும், திருப்பதிக்குச் செல்லும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in