ஓமலூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு; 17 பேர் படுகாயம்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே சாலைப் பணியாளர்கள் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர். இதில் 17 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுக்கா, குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் இன்று (டிச.15) காலையில் வேனில் சாலைப் பணிக்காக காடையாம்பட்டிக்குப் புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் சென்ற வேனை பழனிசாமி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
சேலம் விமான நிலையம் பகுதி அருகே உள்ள குப்பூர் பிரிவு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையைக் கடந்தார். அவர் மீது வேன் மோதிவிடாமல் தவிர்க்க வலது பக்கம் ஓட்டுநர் வண்டியைத் திருப்பியுள்ளார். அப்போது, குஜராத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் சென்ற 20 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த ஓமலூர் காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களைப் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஏழு வயதுச் சிறுவன் மணிகண்டன் மற்றும் முதியவர் மெய்வேல் (55) பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 17 பேர் சேலம் மற்றும் ஓமலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஓமலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொப்பூர் பகுதியில் நின்றிருந்த கார்கள் மீது லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், இன்று 15 கி.மீ. தொலைவில் உள்ள குப்பூர் பிரிவு சாலையில் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், விபத்தைத் தடுத்திடத் தகுந்த நடவடிக்கையை உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
