

தஞ்சாவூர் மாவட்டத்தில் புரெவி புயல் மற்றும் மழை காரணமாகப் பயிர்கள் பாதித்த பகுதிகளில் வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி இன்று (டிச.15) கள ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே கண்ணனாறு என்ற காட்டாற்றில் மழை வெள்ளத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு, பெரியக்கோட்டை, சொக்கனாவூர் கிராமங்களில் வயல்களில் பல்வேறு நிலைகளில் இருந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டும், ஒரத்தநாடு அருகே உளூர் பகுதியில் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் மழையால் சேதமானதைப் பார்வையிட்டும், விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்தும் தட்சிணாமூர்த்தி கேட்டறிந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் வேளாண்மைத் துறை, வருவாய்த் துறையினரோடு ஆலோசனைக் கூட்டத்தில் புயல், மழை பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வ.தட்சிணாமூர்த்தி கூறுகையில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிர் 1 லட்சத்து 26 ஆயிரத்து 475 ஹெக்டேரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1 லட்சத்து 35 ஆயிரத்து 147 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விவசாயிகள் 90 சதவீதம் பேர் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர்மழையின் காரணமாக 11 ஆயிரத்து 730 ஹெக்டேரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகள் தொடர்பாக வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறையினரோடு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் புரெவி புயல் மற்றும் தொடர் மழை காரணமாகப் பல மாவட்டங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரு தினங்களில் இது தொடர்பான அறிக்கை அரசிடம் அளிக்கப்படும். அதன்பிறகு விவசாயிகளின் பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
அதிகமான விவசாயிகள் காப்பீடு செய்திருப்பதால், இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஆய்வின்போது வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.