குறைந்த விலையில் மருத்துவ மையம், மருந்தகம், உணவகம்: சேவையாற்றி வந்த கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அறங்காவலர் காலமானார்

சமூகச் செயற்பாட்டாளர் சுப்பிரமணியத்தின் உடல் ஊர்வலமாக இன்று காலை எடுத்துச் செல்லப்பட்டது. படம் : டி.ஜி.ரகுபதி. 
சமூகச் செயற்பாட்டாளர் சுப்பிரமணியத்தின் உடல் ஊர்வலமாக இன்று காலை எடுத்துச் செல்லப்பட்டது. படம் : டி.ஜி.ரகுபதி. 
Updated on
2 min read

லாப நோக்கம் இன்றிக் கடந்த பல வருடங்களாக மலிவு விலையில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை, மருந்துகள், உணவுகளை அளித்து வந்த கோவை சாந்தி கியர்ஸ் அண்ட் சோஷியல் சர்வீஸ் நிறுவன அறங்காவலரும் சமூகச் செயற்பாட்டாளருமான சுப்பிரமணியம் (78) உடல்நலக் குறைவால் இன்று (டிச.11-ம் தேதி) காலமானார்.

கோவை - திருச்சி சாலையில், சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் அறங்காவலராக சுப்பிரமணியம் இருந்து வந்தார். 1972-ம் ஆண்டு சுப்பிரமணியம் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, இயந்திர உதிரி பாகங்களைத் தயாரித்து, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தார். இவரது நிறுவன உதிரிபாகங்களுக்குச் சந்தையில் அதிக வரவேற்பு இருந்தது.

பின்னர், கடந்த 1996-ம் ஆண்டு சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பை சுப்பிரமணியம் தொடங்கினார். இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்பிரமணியம் இருந்து வந்தார். திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகே செயல்பட்டு வந்த சாந்தி சோஷியல் சர்வீஸ் மையத்தில், மருத்துவ மையம், மலிவு விலை மருந்தகம், உணவகம் ஆகியவை செயல்பட்டு வந்தன.

சாந்தி கியர்ஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாந்தி சோஷியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை லாப நோக்கமின்றி நடத்தி, சேவை மனப்பான்மையுடன் சுப்பிரமணியம் செயல்பட்டு வந்தார். மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் உணவகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.

மருத்துவர் கட்டணம் 30 ரூபாய்

மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய் ஆகும். வெளிவிலையை விட இங்குள்ள மருத்தகங்களில் 20 சதவீதம் குறைந்த விலையில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் இங்கேயே மருத்துவ ஆலோசனை பெறவும், பரிசோதனைகள் செய்யவும், மருந்துகள் வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்புக்குச் சொந்தமாக பெட்ரோல் பங்க் அருகே செயல்பட்டு வருகிறது. ஸ்டாக் வரும்போது பெட்ரோல் என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும்வரை இங்கு விற்பனை செய்யப்படும்.

சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின் மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊடகங்களில் முகத்தைக் காட்டுவதில்லை என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.

78 வயதான சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (11-ம் தேதி) காலையில் அவர் உயிரிழந்தார்.

முகம் தெரியாவிட்டாலும், சேவைகள் மூலம் மக்கள் மனதில் வாழ்கின்றார் சுப்பிரமணியம். அவரது உடல் சாந்தி சோஷியல் சர்வீஸ் மையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சுப்பிரமணியத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in