

புதுச்சேரியில் இன்று புதிதாக 43 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச.11) வெளியிட்டுள்ள தகவல்:
''புதுச்சேரி மாநிலத்தில் 1,465 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில்-7, காரைக்காலில்-12, ஏனாமில் ஒருவர், மாஹேவில் 23 பேர் என மொத்தம் 43 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரியில் ஒருவர், காரைக்காலில் ஒருவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 406 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 204 பேரும், வீட்டுத் தனிமையில் 163 பேரும் என மொத்தம் 367 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 48 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 420 (97.36 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 4 லட்சத்து 30 ஆயிரத்து 517 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 88 ஆயிரத்து 831 பேரின் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என்று வந்துள்ளன''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.