

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு 7 அடி உயரத்தில் அவரது முழு உருவத்தை பனை ஓலையால் உருவாக்கி, பார்வைக்கு வைத்துள்ளார் பனைத் தொழிலாளி பால்பாண்டி.
தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்த இவர், பனை ஓலையால் கலைநயம் மிக்க பொருட்களை உருவாக்கி காட்சிப்படுத்தி வருகிறார்
பெருந்தலைவர் காமராஜர், அப்துல்கலாம், தாஜ்மகால், கோபுரம், வில்வண்டி, மாட்டு வண்டி, குழந்தைகள், பனைத் தொழிலாளி என சுமார் 100-க்கும் மேற்பட்ட பொருட்களை பனைஓலையால் உருவாக்கி அவரதுவீட்டில் பார்வைக்கு வைத்துள்ளார். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு 7 அடி உயரத்தில் அவரது முழு உருவச் சிலையை பனை ஓலையால் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து பால்பாண்டி கூறும்போது, ‘‘பனை ஓலையால் ஏராளமான பொருட்கள் செய்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக கடந்த மூன்று மாத காலம் கடுமையாக உழைத்து தற்போது 7 அடி உயரத்தில் ஜெயலலிதா சிலையை உருவாக்கியுள்ளேன். எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதனை ஆர்வமுடன் பார்த்து, பாராட்டுகின்றனர். எனக்கு இது ஊக்கம் அளிப்பதாக உள்ளது’’ என்றார்.